முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த வைத்திலிங்கம் தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வாக தன்னை இன்று (21.01.2026) திமுகவில் இணைத்துக் கொண்டார். அதோடு வைத்திலிங்கத்தின் மகன் பிரபுவும் திமுகவில் இணைந்தார். அதேபோல் ஓபிஎஸ் ஆதரவாளரும், குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது
இந்நிலையில் திருச்சி விமான நிலையம் வந்திருந்த ஓ. பன்னீர்செல்வத்தை, அவரது ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் அங்கிருந்து அழைத்துச் சென்றார். இதற்கிடையே ஓ. பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள், “வைத்திலிங்கம் திமுகவில் இணைந்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “இது குறித்து அவரிடம் தான் கேடக வேண்டும்” எனப் பதிலளித்தார். மேலும், “உங்களுடன் இருந்தவர்கள் யாருமே இப்போது உங்களுடன் இல்லை. வேற வேற கட்சிக்குச் சென்று விட்டார்கள். எனவே தேர்தல் நிலைப்பாடு என்ன?” எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “பொறுமையாக இருங்கள்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, “பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு வரும் போது சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா?. அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளீர்களா?. உங்களுக்கு அழைப்பு வந்திருக்கா?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு, “இல்லை... இல்லை... பொறுமையாக இருங்கள்” எனத் தெரிவித்தார். செய்தியாளர்கள், “நீங்கள் திமுகவில் இணைவதாகச் சொல்கிறார்கள். எதுவும் நடக்கலாம் என நீங்கள் ஏற்கனவே சொல்லிருந்தீர்கள்” என்ற கேள்விக்கு ஓ. பன்னீர்செல்வம், “பொறுமையாக இருங்கள்” எனத் தெரிவித்தார்.
Follow Us