Advertisment

“நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்திக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது” - ஓபிஎஸ் குற்றச்சாட்டு

nainarpann

o.panneerselvam criticizes nainar nagendran

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்களோடு நேற்று முன் தினம் (31.07.2025) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 3 மணிநேரமாக நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கலாமா? அல்லது விலகலாமா? என்பது குறித்து இரு வேறு கருத்துக்கள் ஆதரவாளர்கள் இடையே இருந்ததாகக் கூறப்பட்டது. அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு பிரிவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

Advertisment

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தனது உறவை முறித்துக் கொண்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெறாது. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் அதனுடைய தலைவர் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் விரைவில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்” என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ஒரே நாளிலேயே இரண்டு முறை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்திருந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.

அதனை தொடர்ந்து, நேற்று (01-08-25) மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டமன்றத்தில் சந்திக்கும் போதும் சரி, நான் ஏற்கனவே போனில் அவரிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவு அவருடைய சொந்த பிரச்சனையா? அல்லது வேறு ஏதும் பிரச்சனையா என்பது எனக்கு தெரியவில்லை. என்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன். ஓபிஎஸ் விரும்பினால் ஆகஸ்ட் 26ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறேன். கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிக்கை வெளியிடுவதற்கு முன்பாகவே நான் போன் பண்ணி பேசி இருந்தேன். எதுவும் முடிவெடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டேன். டி.டி.வி.தினகரனிடமும் இதுகுறித்து பேசி இருக்கிறேன்” என தெரிவித்தார். இதனை தொடர்ந்து, ஓபிஎஸ் தரப்பை பாஜக சமாதானப்படுத்த முயல்வதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், உண்மைக்கு மாறான தகவல் நயினார் நாகேந்திரன் வெளியிடுவதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதில் எள்ளளவும் உண்மை இல்லை. எனவே, இது குறித்த உண்மை நிலையை தெரிவிப்பது என் கடமை. நயினார் நாகேந்திரனை, ஆறு முறை கைபேசியில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன். ஆனால், அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை. எனவே, நயினார் நாகேந்திரனிடம் பேச வெண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதற்கும் அவர், எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை.

Advertisment

இதனைத் தொடர்ந்து, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான இரா. வைத்திலிங்கம் மற்றும் கழக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான  பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோரை கலந்தாலோசித்த பின்னர், பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு 24-07-2025 அன்று நான் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது. உண்மையிலேயே, நயினார் நாகேந்திரனுக்கு பிரதமரை நான் சந்திக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்குமேயானால், நான் கைபேசியில் அழைத்த அழைப்பை பார்த்தோ அல்லது குறுஞ்செய்தியின் அடிப்படையிலோ என்னிடம் பேசியிருக்கலாம். அல்லது எனது கடிதம் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அதற்கான ஏற்பாட்டினை செய்திருக்கலாம். ஆனால் எதையும் செய்யவில்லை. இதிலிருந்து, நான் பிரதமரை சந்திப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது. எனவே, பிரதமரைச் சந்திப்பது தொடர்பாக நான் நயினார் நாகேந்திரனிடம் சொல்லவில்லை என்பது சரியல்ல, உண்மைக்கு புறம்பானது. நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் என்ற பொறுப்பில் இருக்கிறார். ஆகவே, இனியாவது அவர் உண்மை பேச வேண்டும் என்பதே எனது விருப்பம்’ எனத் தெரிவித்துள்ளார்

nainar nagendran O Panneerselvam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe