Onion trader's house robbed in kallakurichi
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள ராவத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயூப் கான். இவர் வெங்காயம் வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது மனைவி நூர்ஜகான் என்பவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாகன விபத்து ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் வீடு பூட்டியே இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 10 நாள் கழித்து வீடு திரும்பிய ஆயூப்கான் குடும்பத்தினர் வீட்டை வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு பீரோக்களையும் உடைத்து அதிலிருந்த 23 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 1,45,000 பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நடந்த சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள வடபொன்பரப்பி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை பெற்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைரேகை நிபுணர்களைக் கொண்டு வீட்டில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகை மற்றும் பணங்களை கொள்ளை அடித்து வரும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Follow Us