அண்மையாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் வந்த வண்ணம் உள்ளது.
அண்மையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் அது புரளி என தெரியவந்தது. அதேபோல் புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை, புதுச்சேரி முதல்வர் இல்லம், தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வீடு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்டிருந்தது.
கடந்த 19 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதோடு சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருக்கும் சுங்க இல்ல தலைமை அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்டதால் உள்ளே இருந்த ஊழியர்கள் பதறியடித்து வெளியே வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை, நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (26/05/2025) மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.