சேலம் மாவட்டம் ஏற்காடு டவுன் பகுதியிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் கீரைக்காடு என்ற மலைக் கிராமம் உள்ளது. இங்குத் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சென்னையைச் சேர்ந்த நவீன், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஈஸ்வர் மற்றும் பெரம்பலூரைச் சேர்ந்த பிரசாந்த் ஆகிய 3 பேர் பணியாற்றி வந்துள்ளனர். இத்தகைய சூழலில் தான் இவர்கள் மூவரும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக நேற்று (07.11.2025) இரவு கார் ஒன்றில் பயணித்துள்ளனர். அதன்படி இன்று (08.11.2025) அதிகாலை ஒரு மணி அளவில் காக்கம்பாடி என்ற மலைக் கிராமப் பகுதியில் காரில் சென்று கொண்டிந்தனர்.
அப்போது, கொண்டை ஊசி வளைவு அருகே கார் சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் மலைப்பாதையை ஒட்டி உள்ள 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக காரில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் கூச்சலிட்டுள்ளனர். இதனையடுத்து மூவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த மலைக் கிராம மக்கள் ஓடிச் சென்று அவர்களை மீட்டுள்ளனர். இருப்பினும் இந்த விபத்தில் காரில் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
அதே சமயம் ஈஸ்வர் மற்றும் நவீன் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ஏற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் காரில் சென்ற மூவரும் மது அருந்திவிட்டு காரை இயக்கியுள்ளனர். இதனால் கார் விபத்தில் சிக்கியுள்ளது எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். ஏற்காடு மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/08/yercaud-car-ins-2025-11-08-12-45-12.jpg)