தி.மு.க. இளைஞரணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நாளை (பிப்ரவரி 7) விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி கலைஞர் திடலில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் ஒரு லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்து தி.மு.க. விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு நிதியமைச்சருமான தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பின்போது - “தென் மண்டலத்தில் திண்டுக்கல் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 10 வருவாய் மாவட்டங்கள், 20 கழக மாவட்டங்கள் மற்றும் 58 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், கிளை, வார்டு, பூத் ஆகிய அனைத்து நிலைகளிலும் செயல்படும் இளைஞரணி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் தகுதியான நிர்வாகிகள் மட்டுமே இந்த மாநாட்டில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள Standard Operating Procedure (SOP) மற்றும் அரசாணைகளுக்கு முழுமையாக உட்பட்டு நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிடமிருந்தும் உரிய அனுமதிகள் பெறப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடம், உணவு, குடிநீர், கழிப்பிட வசதி, ஒலி-ஒளி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள், மருத்துவக் குழுக்கள், தீயணைப்புத் துறை உள்ளிட்ட அவசர மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் இந்த முக்கியமான மாநாட்டை நடத்த அனுமதி வழங்கிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இது விருதுநகர் மாவட்டத்திற்கு கிடைத்த பெருமைமிக்க வாய்ப்பாகும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (பிப்ரவரி 7) மாலை சுமார் 5 மணியளவில் மாநாட்டுத் திடலுக்கு வருகை தர உள்ளார். திருவண்ணாமலை வடக்கு மண்டல இளைஞரணி சந்திப்பைத் தொடர்ந்து, தென் மண்டலத்தில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை அனைத்து மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் மிகுந்த உற்சாகத்துடன் மேற்கொண்டு வருகின்றனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/06/vdu-dmk-meet-2026-02-06-12-57-29.jpg)
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த மாநாடு அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். இந்த மாநாட்டு மேடையில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இளைஞரணிக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் முக்கியமான அரசியல் செய்திகளை வழங்க உள்ளனர். அந்த செய்திகளை நாளை மாலை மாநாட்டு மேடையில் அனைவரும் அறிந்துகொள்ளலாம்” என்றார்.
Follow Us