திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த ஆண்டார்மடம் கிராமத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வந்தது. இந்தப் பள்ளியில் 7ஆம் வகுப்பு வரை சுமார் 70 மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். இந்தப் பள்ளி கடந்த சில ஆண்டுகளாக முறையான அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

Advertisment

அண்மையில் நடைபெற்ற ஜமாபந்தியிலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் நீதிமன்றத்திலும் அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளி தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. பல்வேறு புகார்களின் அடிப்படையில் வருவாய்த்துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உரிய அங்கீகாரம் இன்றி இயங்கியது தெரியவந்தது.

Advertisment

இதனையடுத்து காவல்துறை பாதுகாப்புடன் கல்வித் துறை அதிகாரிகள் முன்னிலையில் வருவாய்த் துறையினர் தனியார் பள்ளிக்கு சீல் வைத்தனர். மேலும் தனியார் பள்ளியில் பயின்று வந்த 70 மாணவர்களை அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த தனியார் பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.