Officials inspect an unused ONGC oil well! Photograph: (pudukottai)
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நல்லாண்டார்கொல்லை, வடகாடு கல்லிக்கொல்லை, கரு வடதெரு, கரு கீழத்தெரு, வனக்கன்காடு, கோட்டைக்காடு முள்ளங்குறிச்சி, கறம்பக்குடி புதுப்பட்டி ஆகிய இடங்களில் எண்ணெய் எடுப்பதற்காக ஓஎன்ஜிசி நிறுவனம் சுமார் 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் அடிகள் வரை ஆழத்திற்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து எண்ணெய் எடுத்து பரிசோதனைகள் செய்துள்ளனர். போதிய வருவாய் கிடைக்காது என்பதால் எண்ணெய் எடுக்கும் முயற்சியை தற்காலிகமாக கைவிட்டதோடு ஆழ்குழாய் கிணறுகளில் கசிவு ஏற்படாமல் 4 இடங்களில் தரைமட்டத்திலும், நல்லாண்டார்கொல்லை, கல்லிக்கொல்லை, கோட்டைக்காடு உள்ளிட்ட 3 இடங்களில் எந்த நேரத்திலும் இயக்கும் அளவில் வாழ்வுகள் அமைத்தும் மூடி வைத்து சென்றனர்.
அனைத்து இடங்களிலும் உள்ள விவசாயிகளுக்கு தற்போது வரை குத்தகை தொகையை ஒஎன்ஜிசி நிறுவனம் வழங்குவதுடன் ஆண்டுக்கு ஒரு முறை அதிகாரிகள் வந்து கசிவுகள் உள்ளதா என்று சோதனைகளும் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் கடந்த 2017 பிப்ரவரியில் மத்திய அரசு நெடுவாசல் கிராமத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட கச்சாப் பொருட்களை எடுக்க ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அறிவித்து தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்த நிலையில் நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராம விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவில் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். சுமார் 197 நாட்கள் நெடுவாசல் போராட்டம் நடந்தது. அதே போல நல்லாண்டார்கொல்லை, வடகாடு, கோட்டைக்காடு ஆகிய பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் திருவிழா போல நடந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/15/a5237-2025-09-15-15-59-01.jpg)
போராட்டம் நாளுக்கு நாள் விரிவடைவதைப் பார்த்து மத்திய, மாநில அமைச்சர்கள் நெடுவாசல் திட்டம் வராது என்று உறுதி அளித்ததோடு 7 எண்ணெய் கிணறுகளையும் மூடி விவசாயிகளிடம் ஒப்படைப்பதாக அப்போதைய மாவட்ட ஆட்சியர் கணேஷ் போராட்டக் குழுவிடம் தனித்தனியாக எழுதிக் கொடுத்தார். இந்நிலையில் வானக்கன்காடு கிராமத்தில் உள்ள எண்ணெய் கிணற்றில் கசிவு ஏற்பட்டு தீ பற்றியதால் கடந்த 2017 அக்டோபர் 6 ந் தேதி வந்த ஒஎன்ஜிசி அதிகாரிகள் வெளியிலிருந்து டிப்பர் லாரிகள் மூலம் மண் கொண்டு வந்து அந்த கிணற்றில் கொட்டி தற்காலிகமாக மூடிச்சென்றனர்.அதன் பிறகு விவசாயிகளும் பல முறை கோரிக்கை வைத்தனர்.
தற்காலிகமாக மூடப்பட்ட வானக்கன்காடு ஒஎன்ஜிசி கிணறு உள்ள இடத்திற்கு கடந்த 2021 ஆகஸ்ட் 5 ந் தேதி காரைக்காலில் இருந்து ஓஎன்ஜிசி பொது மேலாளர் (ஆழ்குழாய்) சந்தானகுமார், பொறியாளர்கள் அழகுமணவாளன், ராதாகிருஷ்ணன், மண்ணியல் அருண்குமார், மற்றும் தாசில்தார் சந்திரசேகர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து குத்தகை நிலத்தை அளவீடு, ஆய்வு செய்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/15/a5238-2025-09-15-15-59-27.jpg)
இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 12 ந் தேதி வானக்கண்காடு பயன்படுத்தப்படாத தலைமட்ட ஆழ்குழாய் கிணறுக்கு வந்த ஒஎன்ஜிசி அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆழ்குழாய் கிணற்றை ஆய்வு செய்து எண்ணெய் கசிவு உள்ளதா என்பதை பார்த்தனர். மேலும், மூடப்பட்டுள்ள கிணற்றில் இருந்து எண்ணெய் கசிவு இருந்ததால் அதனை சேகரிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
மேலும், தொடரந்து மீண்டும் கசிவு ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க தற்காலிகமாக இரும்பு பட்டைகள் வைத்து மூடி பலமான காங்கிரீட் போட்டு மூடும் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் இந்தப் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்த்துள்ளனர். இந்தப் பணிகளின் போது பாதுகாப்பிற்காக தீயணைப்பு வாகனம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். எந்ந எண்ணெய் கிணறும் தற்காலிகமாக மட்டுமே மூடி தொர் கண்காணிப்பில் வைக்கப்படும் என்கின்றனர்.