Officer attacked while checking for gutka near school Photograph: (pazhani)
பள்ளி அருகே குட்கா புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்கப்படுவதாக புகார் வந்த நிலையில் சோதனைக்கு சென்ற அதிகாரிகளுக்கு அடி உதை விழுந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஜவஹர் நகர்ப் பகுதியில் பள்ளி அருகே ராஜவடிவேல் என்பவர் சிறிய அளவிலான மளிகைக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்கப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ஊரகப்பகுதி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜஸ்டின் அமல்ராஜ் மற்றும் அவருடைய உதவியாளர் கருப்பசாமி ஆகியோர் சம்பந்தப்பட்ட மளிகைக் கடையில் சென்று சோதனை செய்துள்ளனர். கடையில் இருந்த புகையிலை குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். அப்பொழுது திடீரென கடையின் உரிமையாளர் ராஜவடிவேல் ஜஸ்டின் அமல்ராஜை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். உடன் சென்ற நபரையும் கீழே தள்ளி தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார். உடனடியாக காவல்துறையினருக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி தகவல் கொடுத்தார். இதில் தப்பி ஓடிய கடை உரிமையாளர் ராஜவடிவேலுவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.