O. Panneerselvam flies to Delhi; plans to meet BJP leaders
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அதன் பின்னர் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, பா.ஜ.கவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி சேர்ந்ததை அடுத்து அந்த கூட்டணியில் இருந்து விலகியது.
அதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டதால் அந்த கூட்டணியில் இருந்து டிடிவி தினகரனின் அமமுகவும் விலகியது. வெளியேறிய இருவரையும் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை பாஜகவினர் மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகி வருகிறது.
இந்த சூழ்நிலையில், டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அதிமுக இணைவது பற்றி முடிவு செய்ய வேண்டும், இல்லையென்றால் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் கெடு விதித்திருந்தார். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அதிமுக இணைவது பற்றி முடிவு அறிவிக்கப்படாமல் இருந்தால் ஓ.பன்னீர்செல்வம் புதிய கட்சி தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று (02-12-25) மாலை டெல்லிக்குச் சென்றுள்ளார். அங்கு அவர், பா.ஜ.க மூத்த தலைவர்களைத் சந்திக்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ஆடிட்டர் குருமூர்த்தியும் டெல்லி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
Follow Us