பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் 1,500க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் நேற்று முன்தினம் (18-12-25) சென்னை சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். காலை தொடங்கிய இப்போராட்டம், மாலை 6 மணிக்கு மேலாக நீடித்தது.

Advertisment

அதனை தொடர்ந்து காவல்துறையினர், போராட்டம் நடத்திய செவிலியர்களை கைது செய்து பேருந்துகள் மூலமாக அவர்களை அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர். ஆனால், செவிலியர்கள் அங்கு அமர்ந்து போராட்டம் நடத்தியதால், அவர்களை மீண்டும் கைது அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Advertisment

அதனை தொடர்ந்து, செவிலியர்கள் போராட்டம் குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு காலி பணியிடங்களே இல்லை என்றும், சீனியாரிட்டி அடிப்படையில் தான் ஒவ்வொரு ஆண்டும் பணி நிரந்தரம் செய்யப்படுகிறது என்றும், விதிமுறைகளை தெரிந்து கொண்டு போராட்டம் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதற்கிடையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் மிரட்டும் தொனியில் பேசுவதாக செவிலியர்கள் சங்கம் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில், சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒப்பந்த செவிலியர்கள் இன்று (20-12-25) மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சம வேலை, சம ஊதிய, கேட்டு போராட்டம் நடத்திய செவிலியர்களை போலீசார் கைது செய்திருந்த நிலையில், இரவோடு இரவாக பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்து நேற்று இரவு முதலே தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.  

Advertisment