தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் பிரச்சாரம், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் மக்களவை எம்.பி.யும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 

Advertisment

அந்த குழுவின் உறுப்பினர்களாக திமுக முதன்மைச் செயலாளாரும், அமைச்சருமான கே.என். நேரு, திமுக துணைப் பொதுச் செயலாளர்களான திருச்சி சிவா எம்.பி., ஆ. ராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்களான அமைச்சர் எ.வ. வேலு, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயத்தில் இன்று (23.02.2026) ஆலோசனை நடத்தினர். 

Advertisment

இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.  அப்போது அவர் பேசுகையில், “கடந்த சட்டமன்ற  தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி பாபநாசம் மற்றும் மணப்பாறை ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு 100 விழுக்காடு வெற்றி பெற்றது. எனவே இந்த முறை ஐந்து தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்குத் தர வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம். இது முதல் கட்ட பேச்சு வார்த்தைதான். எங்கள் கட்சியின் கோரிக்கைகளை எல்லாம் குறித்துக் கொண்டார்கள். 

mmk-jawaharuthulla-team-arivalayam

அது குறித்து முதலமைச்சருடன் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர்கள் கருத்துக்களை எடுத்துச் செல்வோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்போம் என்றும் சொல்லியிருக்கிறார். உதயசூரியன் சின்னத்தில் தான் மனிதநேய மக்கள் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடும். அது குறித்தும் நாங்கள் பேசியிருக்கிறோம். நாங்கள் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். அது குறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் அது பற்றி விவாதிப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

Advertisment