NTK leader seeman harshly criticizes congress party at bihar election result
பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த தேர்தலில், எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணியில் இடம்பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் 25 தொகுதிகளை மட்டுமே கைபற்றியுள்ளது. அந்த கூட்டணி சார்பில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 6 இடங்களை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்த தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருப்பது காங்கிரஸ் கட்சியினரிடையும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், “கருத்துக்கள் வேறு களப்பணி வேறு. இது வியூக வகுப்பாளர்களுக்கு சரியாக வராது. காங்கிரஸ் என்ற ஒரு கட்சியவே அழித்து ஒழிப்பதற்காக களத்துக்கு வந்த மகன் நான். என் இனத்தை அழித்தது, என் இனத்தின் விடுதலை கனவை அழித்தது, கச்சத்தீவை தான்தோன்றித்தனமாய் எடுத்துக் கொடுத்தது, என் மீனவன் வாழ்வுரிமையை பறித்தது, 10 லட்சம் பேரை ஒரே ராத்திரியில் நாடற்றவனாக இறக்கிவிட்டது எல்லாமே காங்கிரஸ் தான் செய்தது.
எனக்கு இருக்கிற வலியும், வன்மமும் உலகத்தில் எவன்கிட்டயும் இல்லை. காங்கிரஸை ஒழிப்பதற்காக தான் களத்திற்கே வந்தேன். அதனால், காங்கிரஸ் வீழ்வதில் எனக்கு பெருமை தான். இந்த நிலத்தில், காங்கிரஸ் செத்து போய்விட்டது. இப்போது இருப்பது ஒரு கம்பேனி தான். திராவிட கட்சிகளில் தோலில் ஏறி வசதியாக பாதுகாப்பாக பயணம் செய்கிறார்கள் இரு தேசிய கட்சிகளும். பா.ஜ.கவும் காங்கிரஸும் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை” என்று கூறினார்.
Follow Us