நம் நாட்டில் தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மக்கள் மற்றும் சிறு வணிகர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் யுபிஐ மூலமாகப் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடைமுறை மக்களுக்கு எளிதாகவும், சில்லறை கொடுப்பதில் ஏற்படும் பிரச்சனைகள் போன்ற எந்த வகையான சிக்கல்களும் இல்லாமலும் இருந்து வந்தது. இருப்பினும், யுபிஐ பயன்பாடு காரணமாக மக்களிடம் பணப்புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், வியாபாரத் தளங்கள் , உணவகங்கள் போன்ற இடங்களில் வாடிக்கையாளர்களுக்குச் சில்லறை கொடுப்பதில் சிக்கல் ஏற்படுவதாக வியாபாரிகள் உள்ளிட்டோர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்குத் தீர்வு காணும் பொருட்டு, அரசு புதிய நடைமுறையைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, ஏடிஎம் இயந்திரங்களில் 10, 20, 50 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, இந்த சேவைக்கான சோதனை தற்போது மும்பை நகரில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், மும்பையில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மார்க்கெட்கள், ரயில் நிலையங்கள் போன்ற இடங்களில், 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை வழங்கும் இந்த புதிய வகை ஏடிஎம் இயந்திரங்கள் தற்போது மக்கள் பயன்பாட்டில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், இந்த வகை இயந்திரங்கள் 500 ரூபாய் போன்ற நோட்டுகளுக்குச் சில்லறை வழங்கும் சேவையையும் கொண்டிருக்கும் என்ற தகவல்களும் வெளியாகின்றன. தற்போது மும்பை நகரில் சோதனை முயற்சியாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வரும் இந்த வகை ஏடிஎம் இயந்திரங்கள், விரைவில் நாடு முழுவதும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த செயல்முறை மூலமாக மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், மக்களிடம் சில்லறை குறித்த பிரச்சனைகள் வெகுவாகக் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us