பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்படப் பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார்.

இத்தகைய சூழலில் கடந்த 02.08.2025 அன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ''உலகத்தில் தந்தையையே வேவு பார்த்த, உளவு பார்த்த பிள்ளை இருக்கிறானா?. இருக்கிறது. அதுவும் என்னை வேவு பார்த்திருக்கிறார்கள். இது சம்பந்தமாக விழுப்புரம் மாவட்டம் இளையனூர் காவல்துறை இன்ஸ்பெக்டரை வரவழைத்து புகார் கொடுத்தேன்.

அதேபோன்று சைபர் கிரைம் என்ற துறையிடமும் புகார் கொடுத்திருக்கிறேன். அந்த சிப் அண்ட் மோடம் அதையெல்லாம் கூட காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறோம். ஒருபக்கம் சைபர் கிரைம் காவல்துறை, இன்றொன்று நானே ஒரு ஸ்பெஷல் ஏஜென்சியை அமர்த்தி இது எப்படி, எங்கிருந்து, யாரால் இயக்கப்படுகிறது என்று அதையும் ஆய்வு செய்திருக்கிறோம். அவர்களும் விரைவில் அது சம்பந்தமாக எனக்கு அறிக்கை கொடுப்பார்கள். இது பிரைவேட் ஏஜென்சி  என்பது காவல் துறைக்கும் சைபர் கிரைமுக்கும் உதவுவதற்காகத்தான் அது உதவியாக இருக்குமே தவிர வேறு ஒன்றும் இருக்காது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அடுத்த பரபரப்பு குற்றச்சாட்டை ராமதாஸ் தரப்பு வைத்துள்ளது. தைலாபுரம் தோட்டத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் அனைத்தும் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாகவும், ராமதாஸ் பயன்படுத்தும் செல்போன் உரையாடல்களும் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை ராமதாஸ் தரப்பு வைத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே ராமதாஸை தொலைபேசி வாயிலாக அழைப்பவர்கள் மற்றும் நேரில் சந்திப்போர்களின் உரையாடல்கள் ஓட்டு கேட்கப்பட்டுள்ளதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாளையே கோட்டக்குப்பத்தில் டிஎஸ்பிஐ சந்தித்து புகார் அளிக்க ராமதாஸ் தரப்பு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.