மனிதக் குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்புகள் கடந்த 06ஆம் தேதி (06.10.2025) முதல் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட 338 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இத்தகைய சூழலில் தான் நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை தேர்வுக் குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அமைதிக்கான நோபல் பரிசை மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் போராளி மரியா கொரினா மச்சாடோ ஆவார். வெனிசுலாவின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடியவர் ஆவார். அதாவது வெனிசுலா நாட்டில் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடியவர் மரியா கொரினா மச்சாடோ ஆவார்.
இவர் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற வெனிசுலா அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தவர். இவர் கடந்த 1967ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி வெனிசுலா நாட்டின் கராக்கல்ஸ் என்ற நகரில் பிறந்தவர் ஆவார். முன்னதாக தனக்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பலமுறை கோரிக்கை வைத்திருந்தார். எனவே இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட உள்ளது என்ற எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உலக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. பல நாடுகளில் போர் ஏற்படும் என்ற நிலைப்பாட்டை மாற்றி உள்ளேன். போர் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதன் மூலம் அதிபர் டிரம்ப்க்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
இதனையடுத்து அதிபர் டிரம்ப் மரியா கொரினா மச்சாடோவை தொடர்பு கொண்டு பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர், எனது சார்பாக மரியா நோபல் பரிசை பெற்றுக்கொண்டதாகச் சொன்னார் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதோடு தொலைப்பேசியில் பேசிய மரியாவிடம் நோபல் பரிசை கொடுக்கும்படி நான் கேட்கவில்லை என்றும் அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும் நோபல் பரிசு கிடைக்காத நிலையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் சீனாவுக்கு 100% வரி விதிப்பதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த உத்தரவானது வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே 30% வரி விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மற்றொரு புறம் தங்களது நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் கனிமங்களுக்கு அதிக வரி விதிக்க சீனாவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அமெரிக்காவில் மின் சாதனங்களின் தயாரிப்பு பாதிக்கும் அபாயம் ஏற்படும் என்பதால், அதிபர் ட்ரம்ப் கூடுதல் வரி விதிப்பு போன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.