Nobel Prize 2025 in Physics announced for 3 people
மனிதக் குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2025ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்புகள் நேற்று (06-10-25) முதல் வெளியாகி வருகின்றன. அதன்படி, 2025ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மேர் இ.பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகிய 3 பேருக்கு கூட்டாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 2025ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று (07-10-25) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் எம். மார்டினிஸ் ஆகிய 3 பேருக்கு இந்தாண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மின்சாரசுற்றுக்களில் மேக்ரோஸ்கோபிக் க்வாண்டம் மெக்கானிக்கல் மற்றும் சுரங்க பாதையினுடைய ஆற்றல் அளவீட்டை கண்டுபிடித்ததற்கான இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.