தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சிக்குக் கடந்த தேர்தலைப் போலவே 25 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் மட்டுமே வழங்க முடியும் என திமுக திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது. அதே சமயம் இந்த பேச்சுவார்த்தையில் தொடக்கத்தில் 41 முதல் 45 இடங்களைக் கேட்ட காங்கிரஸ், தற்போது 35 முதல் 40 இடங்களாவது வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

Advertisment

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் இன்று (03.03.2026) நேரில் சந்தித்துப் பேசினார். அதாவது திமுக - காங்கிரஸ் இடையே நிலவி வரும் தொகுதிப் பங்கீடு குறித்த சிக்கல்களைத் தீர்ப்பதற்காக சுமார் ஒரு மணி நேரம் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது எனக் கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உடன் இணைந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் ப.சிதம்பரம் இந்தச் சந்திப்பு மேற்கொண்டார்.

Advertisment

மற்றொருபுறம் தொகுதிப் பங்கீடு குறித்த முடிவை அறிவிக்க இன்று காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது. முன்னதாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது ப. சிதம்பரம் நேரடியாக முதல்வரைச் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது 29 சட்டமன்றத் தொகுதிகள் 2 ராஜ்யசபா இடங்களைக் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்க திமுக முன் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் 39 சட்டமன்ற தொகுதிகள் என்பதில் இருந்து சற்று இறங்கி வந்த காங்கிரஸ் 36 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

அதேநேரம் 'காங்கிரஸ் கூட்டணி வேண்டாம்' என்று திமுகவுக்குள் குரல்கள் எழுந்திருப்பதாக ஒரு தகவலும் வெளியாகி வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 27 தொகுதிகளுக்கு மேல் கொடுப்பது நல்லதல்ல என திமுக மூத்த அமைச்சர்கள் திமுக தலைமையிடம் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. 30 தொகுதிகள், இரண்டு மாநிலங்களவை சீட் வரை செல்ல திமுக தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படும் நிலையில் இதற்கு திமுகவிற்குள்ளேயே எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. இதனால் காங்கிரஸ்-திமுக கூட்டணி முறிவை நோக்கி செல்கிறதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அதிக தொகுதிகளை கோரும் காங்கிரஸின் இந்த நிர்பந்த அணுகுமுறை ஏற்கத்தக்கது அல்ல. காங்கிரஸ் இந்த அணுகுமுறையில் திமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

Advertisment