No-confidence motion passed against DMK City Council President Photograph: (DMK)
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சியாக செயல்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று நகராட்சியாக மாற்றப்பட்டன இதில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பட்டியல் சமூகத்திற்கு நகராட்சி தலைவர் பதவி அளிக்கப்பட்டது. இதில் வெண்ணிலா என்பவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நகர்மன்ற தலைவராக பணியாற்றி வருகிறார். இதில் திமுக மற்றும் ஆதரவு நகர்மன்ற உறுப்பினர்கள் 19 பேர் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் 5 பேர் என மொத்தம் 24 கவுன்சிலர்கள் உள்ளனர் இந்நிலையில் நகர்மன்றத் தலைவருக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து அக் 23-ஆம் தேதி நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இதில் கலந்து கொண்ட அனைவரும் பெரும்பான்மையாக நகர்மன்ற தலைவரை நீக்க வேண்டும் என கூறியதால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகர்மன்ற தலைவராக இருந்த வெண்ணிலாவிடம் பேசினோம். அவர் 'நான் எந்த தவறும் செய்யவில்லை எதற்காக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளீர்கள் என கேட்டேன். அதற்கு நகர்மன்றத் துணைத் தலைவர் நகராட்சி ஆணையர் யாரும் பதில் கூறவில்லை. நகராட்சியில் 200 கோடி ரூபாய்க்கு மேல் பணி நடைபெற்று உள்ளது. அதில் எனக்காக ஒரு பைசா கூட வழங்கவில்லை. நகராட்சியை பொறுத்தவரை துணைத் தலைவர் என்ன நினைக்கிறாரோ அதுதான். இவரே அமைச்சரிடம் கூறி அதிகாரி முதல் கவுன்சிலர்கள் வரை இவரது கீழே இருக்க வேண்டும் என செயல்படுகிறார். ஏதாவது ஒரு பணிகள் குறித்து கேள்வி கேட்டால் பெண்ணென்றும் பாராமல் ஒரு மாதிரியாக பார்ப்பார். கடந்த மாதம் கரூரில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்திற்கு நான் நகராட்சி காரை பயன்படுத்தினேன். அதற்கு அந்த ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுத்தார்கள். அதனை கண்டித்து நான் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன். ஆணையர் கண்டபடி அலுவலக காரை பயன்படுத்துகிறார் என்று கேட்டேன். அதனால் என் மீது எந்த தவறும் இல்லாத பட்சத்தில் இதுபோன்ற செயலில் துணைத் தலைவர் தலைமையில் அனைவரும் எடுத்துள்ளனர்.
நகர் மன்ற துணைத் தலைவர் பரமகுரு இதேபோன்று மூன்று முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போதெல்லாம் அதை சரி செய்து இவரையே தலைவராக செயல்படும்படி செய்தோம். தற்போது இவர் கவுன்சிலர்களின் பேச்சை மதிக்காமல் செயல்படுகிறார். இதனால் தான் தற்போது தீர்மானத்தை நிறுத்தி வைக்க முடியவில்லை. இதனால் தற்போது இவர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருகிறார்'' என்றார்.
விவரம் அறிய நகராட்சி ஆணையர் முரளிதரனை தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்க மறுத்து விட்டார். கடந்த செப் 22-ந்தேதி இவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று அனைத்து கவுன்சிலர்கள் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.