பீகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 121 தொகுதிகளில் கடந்த 6 ஆம் தேதியும் (06.11.2025), 122 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 11ஆம் தேதியும் (11.11.2025) நடைபெற்றன. இந்த தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (N.D.A.), காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி (இந்தியா கூட்டணி), தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. இத்தகைய சூழலில் தான் பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 14 ஆம் தேதி (14.11.2025) எண்ணப்பட்டன.

Advertisment

இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனையடுத்து பாட்னாவில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (19.11.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பா.ஜ.க மேலிட பொறுப்பாளர்கள், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார், கூட்டணிக் கட்சிகளான லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் பஸ்வான்) தலைவர் சிராக் பாஸ்வான் உள்ளிட்ட தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, பீகாரின் முதல்வராக நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

Advertisment

மேலும், பீகார் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் பீகார் முதல்வராக 10வது முறையாக நிதிஷ் குமார் இன்று (20.11.2025) காலை 11.30 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ​​ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.  அவர்களுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார். 

இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கடந்த 24 ஆண்டுகளில் 10வது முறையாக நிதிஷ்குமார் பீகார் முதல்வராகப் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment