new trick of thieves The camera is the problem
விருதுநகர் பாத்திமா நகர் பகுதியில், ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரே டூவீலர் ஒர்க் ஷாப் நடத்தி வரும் திருமுருகன் என்பவரின் கடையில் நள்ளிரவு நடந்த திருட்டுச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (02.03.2026) அதிகாலை சுமார் 1.30 மணியளவில், கடைக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த இரண்டு கண்காணிப்பு கேமராக்களை இரு நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். பின்னர் அவர்களில் ஒருவர், கேமராக்களை அகற்றி எடுத்துச் செல்லும் காட்சி DVR-ல் தெளிவாகப் பதிவாகியுள்ளது. திருடப்பட்ட கேமராக்களின் மதிப்பு சுமார் ரூ.10,000 என்று கூறப்படுகிறது. இதுகுறித்து விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையின் படி, மரியா ஜெசுராஜ் (23) மற்றும் சுந்தர் (23) ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரும் பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர்களாம். இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு என்னவெனில், பாத்திமா நகர் பகுதியில் வீடுகளின் வெளியே வைக்கப்பட்ட பொருட்கள் தொடர்ந்து திருடு போகிறது. கண்காணிப்பு கேமராக்கள் திருடர்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதால், திட்டமிட்டே கேமராக்களையும் திருடுகிறார்கள். ‘கண்காணிப்பு கேமராவையே தூக்கிச் சென்றால் பாதுகாப்பு எங்கே?’ என இந்த ஏரியாவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவில் கைது செய்து, தொடர்ச்சியான திருட்டு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட காவல்துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேமராவை திருடி தப்பிக்க நினைத்தாலும், அதே பகுதியில் இருந்த மற்றொரு வீட்டின் சிசிடிவி கேமரா திருடர்களை அடையாளம் காட்டிவிட்டது.
Follow Us