ரேஷன் கடைகளில் ரேஷன் கார்டு மூலம் மலிவு விலையில் ஏழை மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மளிகை பொருட்களை விநியோகித்து வருகின்றன. குறிப்பாக பண்டிகை காலங்களில் தமிழக அரசு சார்பில் பரிசு தொகுப்புகளும் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைகளில் பொருட்கள் விநியோகம் செய்யும்போது மத்திய அரசு திட்ட அரிசிக்கு ஒரு முறையும், மாநில அரசு திட்ட பொருட்களுக்கு ஒரு முறையும் என மொத்தம் 2 முறை ரேஷன் அட்டைதாரர்கள் கைவிரல் ரேகை பதிவு செய்து வந்தனர். இனிவரும் காலங்களில் ஒரு முறை செய்தால் போதும் என கூறப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு ரேஷன் அட்டைதாரர்கள் அதிக நேரம் காத்திருப்பதை கருத்தில் கொண்டு தற்போது இந்த காலதாமத்தை குறைக்கும் வகையில் தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி முன்னுரிமை ரேஷன் அட்டைகள், மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா ஆகிய ரேஷன் அட்டைகளுக்கு இனி பொருட்களை வழங்க ஒரே ஒரு முறையே கை விரல் ரேகை அல்லது கண் கருவிழி பதிவு செய்தால் போதும் எனத் தெரிவித்துள்ளது.

இதற்காக தற்போது எலக்ட்ரானிக் விற்பனை மிஷினில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி அனைத்து பொருட்களும் குறைந்த நேரத்தில் வழங்கப்படும். மேலும் ரேஷன் அட்டைதாரர்கள் காத்திருக்கும் நேரம் கணிசமாக குறையும் என்று தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனுடன் இந்த முடிவால் தற்போது பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு இரண்டு முறை கைவிரல் ரேகை பதிவு செய்து வந்த நிலையில் இனி வரும் மாதங்களில் ரேஷன் பொருட்களை பெற ஒரு முறை கைரேகை பதிவு செய்தால் போதும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே ரேஷன் கடைகளை அனுப்புவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனை இலக்காக கொண்டு பொது விநியோக முறையின் கீழ் அத்தியாவசிய பொருட்களை வீடுவீடாக விநியோகிக்கும் சேவையை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த திட்டம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.