வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே சீவூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சித்தூர்கேட் பகுதியில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரின் நிதியிலிருந்து 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட பயணியர் நிழற்கூடம், கடந்த ஏப்ரல் 2025இல் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் அவர்களால் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது. ஆனால், திறப்பு விழாவுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, மேற்கூரையில் உள்ள சிமெண்ட் பூச்சு உதிர்ந்து விழுந்தது.

இதையடுத்து, ஒப்பந்ததாரர்கள் இரவோடு இரவாக மேற்கூரையைச் சீரமைத்தனர். இருப்பினும், இன்று (ஆகஸ்ட் 10) அதே பயணியர் நிழற்கூடத்தின் மேற்கூரையில் இருந்து இரண்டாவது முறையாக சிமெண்ட் பூச்சு உதிர்ந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் நிழற்கூடத்தில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்தவொரு அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது.

இந்தச் சம்பவத்திற்கு, ஒப்பந்ததாரர்கள் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தி நிழற்கூடத்தைக் கட்டியதே காரணம் என உள்ளூர் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், இத்தகைய தரமற்ற கட்டுமானப் பணிகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.