New labor laws that have come into effect
தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம், பணி நிலைமைகள் மற்றும் ஊதியம் குறித்த 4 முக்கிய தொழிலாளர் சட்டங்கள் இன்று அமலுக்கு வந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
4 முக்கிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. தொழிலாளர் நலன், சமூக பாதுகாப்பு கருதி 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து 4 சட்டத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பு 2020, தொழில் உறவுகள் சட்டத் தொகுப்பு 2020, ஊதியம் குறித்த சட்டத் தொகுப்பு 2019, தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் & பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு 2020 ஆகியவை நடைமுறைக்கு வந்துள்ளன.
இதில், குறைந்தபட்ச ஊதியம் தாமதமின்றி கிடைப்பது, அனைவருக்கும் நியமன கடிதங்களை வழங்குவது, மகளிர்களுக்கு உரிய ஊதியம் மட்டுமல்லாமல் அவர்களுக்கான போதிய மரியாதையும் வழங்குவது, ஓராண்டு பணிக்குப் பிறகு குறிப்பிட்ட காலப் பணியாளர்களுக்கும் பணிக்கொடை கிடைக்கும் உத்தரவாதம் வழங்குவது, 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வது, அனைவருக்கும் 100% மருத்துவ காப்பீட்டு வழங்குவது, கூடுதல் நேரம் பணிபுரிந்தால் அவர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் பெறுவது, ஆபத்தான துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 100% சுகாதாரப் பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட புதிய தொழிலாளர் சட்டங்கள் இன்று அமலுக்கு வந்துள்ளது.
இந்த சட்டங்களின் மூலம் 9 முக்கிய உத்தரவாதங்கள் அமலுக்கு வந்துள்ளன. எனவே வரும் காலங்களில் தொழிலாளர்கள் எந்த துறையில் பணிபுரிந்தாலும் சரி அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம், பணி நியமன கடிதங்கள், மருத்துவ காப்பீடு, மருத்துவ பரிசோதனை போன்ற அம்சங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‘இன்று, நமது அரசாங்கம் நான்கு தொழிலாளர் குறியீடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இது சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் விரிவான மற்றும் முற்போக்கான தொழிலாளர் சார்ந்த சீர்திருத்தங்களில் ஒன்றாகும். இது நமது தொழிலாளர்களுக்கு பெரிதும் அதிகாரம் அளிக்கிறது. இது இணக்கத்தை கணிசமாக எளிதாக்குகிறது. மேலும், வணிகம் செய்வதை எளிதாக்குகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Follow Us