மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களும் உள்ளன. இந்த நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாகக் கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த மோசடி வழக்கு தொடர்பான விசாரணை, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது. அதில் நெல்லை, பாளையங்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிளைகளை நிர்வகித்து வந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

Advertisment

இந்நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் போலீசார் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “பொதுமக்கள் கவனத்திற்கு சென்னை  உயர்நீதிமன்ற உத்தரவின் படி நியோமேக்ஸ் பிராப்பர்ட்டீஸ் பிரைவேட் லிமிடட் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் (1 + 44) முதலீடு செய்து பாதிக்கப்பட்டு இதுவரை மதுரை பொருளாதார குற்றபிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் (மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள்) இதுவரை புகாரளிக்காத முதலீட்டாளர்கள் யாரேனும் இருப்பின் வருகின்ற 08.10.2025 ஆம் தேதிக்குள் மதுரை பொருளாதார குற்றபிரிவு அலுவலகத்திற்கு, காவல் துணைக்கண்காணிப்பாளர். பொருளாதார குற்றப் பிரிவு, நியோமேக்ஸ் (SIT), சங்கரபாண்டியன் நகர், தபால் தந்தி நகர் விரிவாக்கம், பார்க் டவுன் பேருந்து  நிலையம் அருகே, மதுரை- 625017 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ, நேரிலோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் உரிய ஆவணங்களுடன் புகாரளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் வெளிநாட்டிலோ அல்லது தொலைவிலோ இருப்பின் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் புகாரளிக்க 08.10.2025 கேட்டுக்கொள்ளப்படுகிறது. 08.10.2025ஆம் தேதிக்குப் பின் கொடுக்கப்படும் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்படுகிறது”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.