Nellai, Madurai...' - People shocked by the broad daylight incident Photograph: (POLICE)
நெல்லையில் பட்டப்பகலில் தந்தை கண் முன்னே மகன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இதேபோல மதுரையிலும் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லை மாநகர் கே.டி.சி நகர் அஷ்டலட்சுமி தெருவில் தனியார் மருத்துவமனைக்கு தந்தையை அழைத்துச் சென்று கொண்டிருந்த பொழுது கவின் என்ற இளைஞர் மர்ம நபர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த கொலைச் சம்பவத்தில் கொலையில் ஈடுபட்டது காவலர் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இருப்பினும் போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையிலும் இதேபோல இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை பெருங்குடியில் அம்பேத்கர் நகரில் ஆறு பேர் கொண்ட கும்பல் இன்று (27/07/2025) மதியம் இளைஞர் ஒருவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் சமத்துவபுரத்தில் நிகழ்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான முனீஸ்வரன் என்பவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கருமலை மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரையும் மர்ம கும்பல் ஒன்று வெட்டி உள்ளது.
இதில் கருமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலமுருகன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட கருமலை இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். மூன்று வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் கருமலை மற்றும் பாலமுருகனை ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் கருமலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.