'Nehru became India's first prime minister through vote rigging' - Amit Shah attacks Photograph: (amithsha)
இந்தாண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 01 ஆம் தேதி (01.12.2025) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் மொத்தம் 15 அமர்வுகளுடன் டிசம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய திருப்பரங்குன்றம் தீர்ப்பு குறித்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் 120 எம்பிக்கள் கையெழுத்திட்ட மனுவானது வழங்கப்பட்டிருந்தது. அதில் திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு சமூக பாதுகாப்பிற்கு எதிராக இருக்கிறது. எனவே அவர் நீதிபதியாக நீடிப்பதற்கு தகுதி இல்லாதவர் என்று கூறப்பட்டிருந்தது.
திமுக எம்.பி,க்களான கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ. ராசா காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மார்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு. வெங்கடேசன், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கௌரவ் கோகாய், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மான நோட்டீசை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கியிருந்தனர்.
வாக்கு திருட்டு விவகாரம் குறித்து இன்று மக்களவையில் பரபரப்பு விவாதங்கள் ஏற்பட்டது. வாக்கு திருட்டு விவகாரம் குறித்து பதிலளித்து பேசிய அமித்ஷா, ''பிரசாந்த் கிஷோர், தேஜஸ்வி யாதவ் ஆகியோரிடம் இரண்டு வாக்காளர் அட்டைகள் இருந்தது'' எனப் பேசுகையில் குறுக்கிட்ட ராகுல் காந்தி, ''ஹரியானா வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்த தன் கேள்விக்கு பதில் என்ன? ஓட்டு திருட்டு தொடர்பாக ஆதாரங்களுடன் விவாதிக்க தயார்'' என்றார்.
தொடர்ந்து பேசிய அமித்ஷா, ''நான் என்ன பேச வேண்டும் என நான் தான் முடிவு செய்ய வேண்டும் நீங்கள் அல்ல. ராகுல் காந்தி முகத்தில் கவலையை பார்க்கிறேன். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் நடந்த முதல் தேர்தலில் வாக்குத் திருட்டு மூலமாகவே நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஆனார். வாக்குத் திருட்டு மூலமாகவே இந்திரா காந்தியும் பிரதமர் ஆனார். உண்மையான ஓட்டு திருட்டு நேரு, இந்திரா காலத்தில் தான் இருந்தது. இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே தேர்தலில் சோனியா காந்தி வாக்களித்துள்ளார். தீபம் ஏற்ற அனுமதித்ததற்காக நீதிபதியை பதவி நீக்கம் செய்ய நினைக்கின்றனர். நீதிபதிக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் அர்த்தமற்றது. தங்களது வாக்கு வங்கியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர்'' எனப் பேசினார்.
Follow Us