NDA parties struggle against dmk party
தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து விட்டதாக திமுக அரசை கண்டித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். சென்னையில் தமிழக பாஜகவின் இளைஞரணி சார்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அதிமுக, பாஜக, பாமக, த.மா.கா., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என 500-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். போதைப் பொருள் நடமாட்டம் குறித்து திமுக அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்கள் எழுப்பட்டன.
முழக்கங்களைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் தே.ஜ.கூ. கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் ஆவேசமாக பேசினர். தமிழக பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா பேசும் போது, “சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் போதை பொருள் நடமாட்டமும், போதைப் பழக்கமும் அதிகரித்துக் கிடக்கிறது. இளைஞர்களும் மாணவ-மாணவிகளும் போதை வஸ்துகளுக்கு அடிமையாகி வருகிறார்கள். தெருவுக்கு தெரு மதுக்கடைகள் திறந்து கிடப்பதும் போதை பழக்கம் அதிகரிக்க ஒரு காரணம். போதைப் பொருள் கடத்தல் சர்வசாதாரணமாக நடக்கிறது. கடத்தல் குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டாலும் ஆக்ஷன் எடுக்கப்படுவதில்லை. போதை பொருள் நடமாட்டத்தை தடுக்கவும் ஒழிக்கவும் திமுக அரசு தவறி வருகிறது’’ என்று குற்றம்சாட்டினார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அனைவரும் திமுக அரசை கண்டித்துப் பேசினர். சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தினை தொகுத்து மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பி வைத்துள்ளது மத்திய உளவுத்துறை..
Follow Us