தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது முதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன. அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் ஏற்கனவே தொகுதி வாரியாக தேதிகளை திட்டமிட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பரப்புரைக்காக திருநெல்வேலிக்கு சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மெகா விருந்து ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் நான்கு பேர் என அதிமுக தரப்பிலும் அதேபோல பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

நான்கு வகையான சூப்புகள், 10 வகையான இனிப்புகள் உட்பட 109 வகையான  உணவுகள் அடங்கிய பிரம்மாண்ட விருந்து வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகள் தொடங்கி ஆந்திர, கர்நாடக, டெல்லி வரை உள்ள நார்த் இந்தியன் உணவுகளும் என 109 உணவுகள் இடம் பெற்றுள்ளன.

Advertisment
a4653
ops Photograph: (bjp)

மறுபுறம் மோடியை சந்திப்பது தொடர்பாக பேச அழைத்தபோது தன்னுடைய மொபைல் அழைப்பை நயினார் நாகேந்திரன் எடுக்கவில்லை என பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு வைத்ததோடு, நயினார் நாகேந்திரனுக்குத் தொடர்புகொண்ட குறுஞ்செய்தி ஒன்றையும் ஓபிஎஸ் காட்டியுள்ளார். இதனால் ஓபிஎஸ்-நயினார் நாகேந்திரன் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.