கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் தனியார் உணவகம் ஒன்றின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்துள்ளனர். அப்போது இந்த பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி நேற்று (30.09.2025) இரவு பரிதாபமாக  உயிரிழந்தனர். கழிவுநீர் தொட்டிக்குள் சுத்தம் செய்ய இறங்கிய 3 கூலித் தொழிலாளிகள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

இந்நிலையில் இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 3 தமிழர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

மலக்குழிகளில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்பொழுது ஓயும் எனத் தெரியவில்லை. தூய்மைப் பணியாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதிலும் அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதிலும் மாநில அரசுகள் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும் என இத்தருணத்தில் வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும், கேரளாவில் பாதிக்கப்பட்ட அக்குடும்பங்களுக்குத் தமிழக அரசின் சார்பாக முடிந்த உதவிகளை செய்து கொடுக்குமாறும் முதல்வர்  மு.க. ஸ்டாலினைக் கேட்டுக் கொள்கிறேன்.