தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் பொதுக்கூட்டம் மதுரையில் ஜனவரி 23ஆம் தேதி நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Advertisment

இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியிருந்தது. இத்தகைய சூழலில் தான் மதுரையில் ஜனவரி 23ஆம் தேதி நடைபெறவிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் பொதுக்கூட்டம் சென்னைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து  பாஜகவின் மாநில நிர்வாகிகள் இன்று (13.01.2026) ஆலோசனை மேற்கொண்டனர். அதில் பொதுக் கூட்டத்திற்கான இடத்தை தேர்வு செய்து அதற்கான அனுமதியை காவல்துறை தரப்பில் இருந்து பெறுவது குறித்து  விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் சென்னையில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க  உள்ள கூட்டத்திற்கான இடத்தை நயினார் உள்ளிட்டோர் இன்று ஆய்வு செய்தனர். 

Advertisment

இது குறித்து நயினார் நாகேந்திரன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள நிலையில் அவர் பங்கேற்கும் மிகப் பிரம்மாண்டமான மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள 3 இடங்களை தேர்வு செய்து அதில் பாதுகாப்பு மற்றும் மக்கள் எளிதில் வந்து செல்வதற்கான இடத்தை தேர்ந்தெடுக்கும் பணிகளை மேற்கொண்டோம். இந்த நிகழ்வில்அதிமுகவின் கோவை புறநகர் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி, பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்” எனத் தெரிவித்துள்ளார். 

nainar-bjp-mic

மற்றொருபுறம் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி செல்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவுடனான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வரக்கூடிய சூழலில் நயினார் நாகேந்திரனின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில்  முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதாவது மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் டெல்லியில் உள்ள இல்லத்தில் நாளை (14ஆம் தேதி) பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்த பொங்கல் பண்டிகையில் கலந்து கொள்வதற்காக நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜவின் முன்னாள் மாநில தலைவர் ஆகியோர் இன்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளனர். 

Advertisment