தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு 2026இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர். அதன்படி, தி.மு.க தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் அதே கூட்டணியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. மறுபுறம், பிரிந்து கிடந்த அதிமுக - பா.ஜ.க கூட்டணி 2026ஆம் தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மீண்டும் சேர்ந்திருக்கிறது.
இந்த நிலையில், தி.மு.கவை விட அதிக வாக்குகள் வி.சி.கவிடம் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நத்தம் விஸ்வநாதன், “திமுகவிடம் 10 சதவீதத்துக்கு மேல் வாக்கு வங்கி இல்லை. திருமாவளவனின் சக்தி அவருக்கே தெரியவில்லை. திமுகவை விட அதிக வாக்கு வங்கி உள்ள கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தான். அவர் வாய்ப்பு கிடைத்தும் பயன்படுத்தவில்லை.
சிறுபான்மையினர் வாக்குகள், திருமாவளவனின் வாக்குகள் இதையெல்லாம் கழித்து பார்த்தால் திமுகவுக்கு ஒன்றுமே இருக்காது. திமுக கூட்டணியில் யாரும் மகிழ்ச்சியுடன் இல்லை. மக்கள் பிரச்சனை, பொது பிரச்சனைகளில் திமுக கவனம் செலுத்துவது இல்லை. அமித் ஷா உள்பட யார் என்ன சொன்னாலும் எடப்பாடி பழனிசாமி தான் சுப்ரீம் கோர்ட்” என்று கூறினார்.