தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, மதுரை மண்டேலா நகர் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் இன்று (01-26) தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர்.

Advertisment

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “அரசியலில் நேர்மை என்று வரும்போது ஒட்டுமொத்த நாட்டுக்குமே ஒரு  எடுத்துக்காட்டாக திகழ்ந்தார் பெருந்தலைவர் காமராஜர். ஆனால் திமுக இதற்கு நேர்மாறான எடுத்துக்காட்டு. பணியிட மாற்றங்கள் விஷயத்தில் 365 கோடி ரூபாய் மோசடி, அரசு பணிகள் வாங்கி தரும் விஷயத்தில் 900 கோடி ரூபாய் மோசடி,  ஒப்பந்தங்கள் பெறுவதில் 1000 கோடி ரூபாய் பணம் பெற்ற மோசடி, மணல் திருட்டு மோசடியில் 4,700 கோடி ரூபாய், டாஸ்மாக் மோசடி மட்டுமே ரூ.40,000 கோடி ரூபாய். பொதுவாக நன்றாக பணியாற்றுவதில் அமைச்சர்களுக்கு இடையில் ஆரோக்கியமான போட்டி இருக்கும். ஆனால் திமுகவில் மோசடி செய்வதில் அமைச்சர்களுக்குிடையே போட்டா போட்டி இருக்கிறது. இவர்கள் எல்லாம் ஏழைகளிடமிருந்து,  இளைஞர்களிடமிருந்து, விவசாயிகளிடம் இருந்துதான் திருடுகிறார்கள். இப்படிப்பட்ட ஊழல் அரசு மேலும் தொடர்வதற்கு எந்த ஒரு தார்மீக உரிமையும் கிடையாது. அதனால்தான் தமிழ்நாட்டு மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணி அரசை கொண்டு வர  வேண்டும் என்று தீர்மானம் செய்துவிட்டார்கள்.

Advertisment

தமிழ்நாடு, காங்கிரஸை 60 ஆண்டுகளாக மாநிலத்தை விட்டு விலக்கி வைத்திருந்தது.  காங்கிரஸிடமிருந்து விடுதலை பெற்ற முதல் மாநிலம் என்று சொன்னால் அது நம்முடைய தமிழ்நாடுதான். இதனால் தமிழ்நாட்டிடம் காங்கிரஸ் தனது வஞ்சத்தை  தீர்த்துக் கொண்டது. காங்கிரஸ் கட்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது. அப்போது திமுக ஒன்றுமே செய்யாமல் வாய் மூடி மௌனமாக இருந்தது. காங்கிரஸ் அரசாங்கம் மத்தியில் இருந்த வேளையில் அவர்களுக்கு திமுக ஆதரவளித்த போது  ஜல்லிக்கட்டினை தடை செய்து தங்களுடைய அரசாங்கம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால், ஜல்லிக்கட்டினை தொடரச் செய்ய நம்முடைய அரசாங்கம் தான் அவசர சட்டத்தை  பிறப்பித்தது. நாடாளுமன்றத்தில் செங்கோலுக்கு பெருமிதமான ஒரு இடத்தை அளித்து நாம் தான் தமிழ் கலாச்சாரத்துக்கு மரியாதை அளித்தோம்.  

அண்மையில் நான் இந்தியா ஐரோப்பியா ஒன்றியத்துடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஒப்பந்தத்தை நாங்கள் நிறைவு செய்தோம். நாம் இப்போது 28 முன்னேறிய நாடுகளுடன் இணைக்கப்பட்டிருக்கின்றோம். இதனால் தமிழ்நாட்டிற்கு என்ன ஆதாயம் என்பது மீது நான் கவனம் செலுத்த இருக்கின்றேன். இளைஞர்கள், பணியாளர்கள்,  விவசாயிகள், தொழில் முனைவோர் ஆகியோருக்கு இது பொன்னான வாய்ப்பு. தமிழ்நாட்டின் ஜவுளித்துறை, மின்னணு மற்றும் தயாரிப்பு துறை, கடல்சார் உணவு ஏற்றுமதியாளர்கள், ஆயிரக்கணக்கான சிறுகுறு மத்திய தொழில் நிறுவனங்கள் இவர்கள் அனைவருக்கும் உலகளாவிய சந்தைகள் கிடைக்கும். இன்னும் அதிக அளவு ஆர்டர்கள்  கிடைக்கும். விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் சிறப்பான விலைகள்  கிடைக்கும். தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு பல லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். உலக அளவில் போட்டியிட்டு வெற்றி பெற ஒரு சந்தர்ப்பம், தமிழ்நாட்டின் பொருட்களுக்கு கிடைக்கும். ஆனால் இவையெல்லாம் நடக்க வேண்டும் என்றால் உங்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு அரசாங்கம் இருந்தாக வேண்டும். அது என்டிஏ அரசால் மட்டுமே அளிக்க முடியும்.  வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு, வளர்ச்சி அடைந்த இந்தியா  இவற்றை நாங்கள் உறுதி செய்வோம்” என்று பேசினார். 

Advertisment