கோப்புப்படம்
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் இன்று (16.02.2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “(கரூரில்) 41 பேர் இறந்து போனார்கள் அதற்குத் தமிழக அரசும், விஜய்யும் தான் காரணம். 12 மணிக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு 7 மணிக்கு வருகிறார். குடிக்க தண்ணீர் கூட ஏற்பாடு செய்யவில்லை. அதே மாதிரி இப்போது (சேலம்) கூட ஒருத்தர் இறந்து போய்விட்டார். எல்லா கூட்டத்திலும் இறந்து போவது நல்ல சகுனம் தானே?” எனப் பேசியிருந்தார்
இந்நிலையில் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அரசியலில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியைக் கண்டு அஞ்சும் சக்திகள், இன்று தங்களின் மனிதாபிமானமற்ற முகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அறிவாலய கொத்தடிமை ஊதுகுழலாகவே மாறிவிட்ட கமலாலய கள்ளக்கூட்டணி தலைவருக்கு கண்டனம். ஒருவர் உயிரிழந்த நிகழ்வு ‘நல்ல சகுனம்’ என்று கேலி செய்துள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சு அடிப்படை மனிதாபிமானம் அற்றது.
அரசியல் நாகரிகம் என்பது எதிரிகளுக்கும் பொதுவானது. ஆனால், அதிகார மமதையில் இருப்பவர்களுக்கும், தங்களை அறிவாலயத்தின் "கொத்தடிமை ஊதுகுழலாக" மாற்றிக்கொண்டு செயல்படும் கமலாலயத்தின் "கள்ளக்கூட்டணி" தலைவர்களுக்கும் மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. திராவிட மாடல் என்று தம்பட்டம் அடிக்கும் திமுகவும், அவர்களுக்கு மறைமுகமாகத் துணை போகும் பாஜகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது இந்த இழிவான கருத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. மரணத்தில் கூட அரசியல் லாபம் தேடும் இந்த "கள்ளக்கூட்டணி" மனநிலை அருவருக்கத்தக்கது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/16/nainar-pm-2026-02-16-14-55-01.jpg)
ஒரு இழப்பை ஏளனம் செய்வது, தமிழக வெற்றிக் கழகத்தின் கோடிக்கணக்கான தொண்டர்களின் இதயங்களில் நெருப்பை மூட்டுவதற்குச் சமம். மக்களின் உணர்வுகளோடு விளையாடும் இதுபோன்ற தலைவர்கள், வரும் தேர்தலில் மக்களால் தக்க பாடம் புகட்டப்படுவார்கள். அறிவாலயத்தின் ஆணைக்கிணங்க செயல்படும் இத்தகைய ஊதுகுழல்கள், த.வெ.க. கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கப் போடும் சதித் திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகும். மக்களின் துயரத்தில் இன்பம் காணும் இத்தகைய நச்சுக்கருத்துக்களைத் தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. தொடர்ந்து கொச்சையான அநாகரீக மனிதாபிமானமற்ற கருத்தை வெளியிட்டு வரும் நயினார் நாகேந்திரன் உடனடியாகத் தனது பேச்சிற்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us