தமிழக அரசியலின் மூத்த தலைவரும், பிரபல மேடை பேச்சாளருமான நாஞ்சில் சம்பத், இன்று (05-12-25) விஜய்யை சந்தித்து தவெக கட்சியில் இணைந்தார். 

Advertisment

தமிழகத்தில் பிரபல மேடை பேச்சாளராக வலம் வரும் நாஞ்சில் சம்பத், தொடக்க காலத்தில் திமுகவில் இருந்து சிறந்த பேச்சாளராக விளங்கினார். அதனை தொடர்ந்து, திமுகவில் இருந்து விலகிய வைகோ மதிமுக என்ற கட்சியை ஆரம்பித்த போது அந்த கட்சியில் நாஞ்சில் சம்பத்தும் இணைந்தார். வைகோ மீது தீவிர பற்று கொண்ட நாஞ்சில் சம்பத்துக்கு மதிமுகவில் பதவி கொடுக்கப்பட்டது.

Advertisment

ஆனால் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நாஞ்சில் சம்பத், அக்கட்சியில் இருந்து விலகி ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக பதவி பொறுப்பு வகித்து வந்த அவர், திடீரென அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் அவர், எந்த கட்சியிலும் சேராமல் அரசியல் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

சமீப காலமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் பேசி வந்தார். ஆனால், திமுக அவரை கண்டுகொள்ளாமல் இருந்தது. இதனையடுத்து, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்த நிலையில், இன்று விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்து கொண்டார். பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜய்யை சந்தித்த நாஞ்சில் சம்பத், அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக வெற்றிக் கழகத்தில் தம்பி விஜய் முன்னிலையில் என்னை இணைத்துக் கொண்டேன். என்னை பார்த்ததும் “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?” என்றார், நான் மெய்சிலிர்த்து போனேன். தமிழக வெற்றிக் கழகத்தை நாடு முழுக்க கொண்டு சேர்க்கின்ற பணியில் ஈடுபடுவேன். வெற்றி நமதே” என்று பதிவிட்டுள்ளார். 

Advertisment