'Nanguneri incident; We want compensation of one crore' - Ramadoss insists Photograph: (pmk)
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை அடுத்த பெரும்பத்து கிராமத்தில் கஞ்சா போதையில் 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் இரு அப்பாவிகள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாங்குநேரி அருகே அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்யவும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என பாமகவின் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள கடம்போடு வாழ்வு கிராமத்திற்கு நேற்றிரவு வந்த கும்பல், இரு சக்கர வாகனத்தில் சென்ற ஜான் என்ற மாற்றுத்திறனாளி, வட இந்தியத் தொழிலாளி ஆகியோரை அரிவாளால் வெட்டியதுடன், அவர்களின் இரு சக்கர வாகனத்தையும் பறித்துக் கொண்டு பெரும்பத்து கிராமத்திற்கு சென்றது. அங்குள்ள தேனீர் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளது. மேலும் அங்கிருந்து தப்பி ஓடிய பொதுமக்களை அரிவாளால் வெட்டியுள்ளது. இந்தத் தாக்குதலைத் தடுக்கவோ, அக்கும்பலைக் கைது செய்யவோ காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இத்தாக்குதலுக்கான காரணம் தெரியாத நிலையில், கஞ்சா போதையினால் ஏற்பட்ட ஆவேசம்தான் இதற்கான காரணமாக இருக்க முடியும் என கணிக்க முடிகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தடையின்றி கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கிடைப்பதை தடுக்க இயலாத இந்த அரசு பெண்கள், முதியவர்கள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத்தரப்பு மக்களையும் ஏமாற்றி வரும் தேர்தலில் வெற்றிபெற, மறைமுகமாக வாக்குக்கு பணம் கொடுத்து வருகிறது. இப்படி தன் ஊழலுக்கு மக்களையும் உட்படுத்துவது மிகவும் கண்டிக்கதக்கது.
நேற்று தாக்குதல் நடத்தி தமிழ்நாட்டையே அதிரவைத்த கும்பலை உடனடியாக கைது செய்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு உடனடியாக வழங்கவேண்டும்' என தெரிவித்துள்ளார்.
Follow Us