கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த தென்னார்காடு மாவட்டமாக இருந்தபோது சுவாமி சகஜானந்தா சிதம்பரத்தில் ஏழை எளிய மக்கள் வாழ்க்கையில் முன்னேற ஒரே வழிக் கல்விதான் என உயரிய சிந்தனையில் 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் பெயரில் கல்வி நிறுவனங்களை நிறுவினார். தற்போது சிதம்பரத்தில் விடுதி வசதியுடன் நந்தனார் பெயரில் இருபாலர் மேல்நிலைப்பள்ளிகள், தொடக்கப்பள்ளி, தொழிற் பயிற்சி நிறுவனம் என இயங்கி வருகிறது. இதில் கல்வி பயின்ற பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பல்வேறு நிலைகளில் உயர்ந்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் நந்தனாரின் புகழ் ஓங்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் தரிசன விழாவின் போது நந்தனார் பட ஊர்வலம் நடைபெறுவது வழக்கமாகும். இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான ஆருத்ரா தரிசன விழாவில் சிதம்பரம் ஓமக்குளம் நந்தனார் மடத்தில் இருந்து நந்தனார் பட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் சிதம்பரம் தெற்கு சன்னதியை அடைந்தது. அங்கு நந்தனார் கல்விக் கழகத் தலைவர் கே.ஐ. மணிரத்தினம் தலைமையில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சமத்துவ மக்கள் படை நிறுவனர் ப.சிவகாமி நந்தனார் பட ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.

Advertisment

நந்தனார் பட ஊர்வலம் கீழவீதி மேலவீதி வடக்கு வீதி தெற்கு வீதி என நான்குவீதிகள் வழியாக மேளதாளம் முழங்க  வலம் வந்து மீண்டும் மடத்தை அடைந்தது. கீழசன்னதியில் நந்தனாருக்கு நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சார்பில் சிறப்புச் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் நந்தனார் கல்விக்கழக பொருளாளர் டி.ஜெயச்சந்திரன், கல்விக்கழக செயலாளர் வி.திருவாசகம், டிரஸ்ட் செயலாளர் டி.கே.எம்.வினோபா, நிர்வாகிகள் கஜேந்திரன், மணலூர் ரவி, இளைய அன்பழகன், பி.பன்னீர்செல்வம், கே.கனகசபை, டி.தெய்வசிகாமணி, கற்பனை செல்வம், தமிழரசன் உள்ளிட்ட நந்தனார் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பொதுமக்கள் நந்தனார் மீது பற்றுள்ளவர்கள் அரசு ஊழியர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.