Nainar Nagendran went to Delhi in a tense political environment
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (13-12-25) காலை டெல்லி சென்றுள்ளார். துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் முத்தரையரின் தபால்தலை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி சென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பா.ஜ.க த.மா.க உள்ளிட்ட கட்சிகள் இருக்கும் நிலையில், கூடுதல் கட்சிகளை இணைக்க வேண்டும் என்று கூட்டணிக்குள் குரல் எழுந்து வருகிறது. ஏற்கெனவே, கடந்த 11ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார். அதில் அதிமுக பொதுக்குழுவில் நடந்த விவகாரம் தொடர்பாக பேசப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனிடையே வரும் டிசம்பர் 15ஆம் தேதி மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரவுள்ள நிலையில், டெல்லி சென்று அமித் ஷாவை நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேச இருப்பது அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது
Follow Us