தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். 

Advertisment

அதன்படி, கடந்த வாரம் திருச்சி மற்றும் அரியலூரில் மக்கள் மத்தியில் விஜய் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, சனிக்கிழமையான நேற்று முன்தினம் (20.09.2025) நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இத்தகைய சூழலில், தாம் தமிழகம் முழுவதும் தனது பிரச்சாரப் பயணத்தை அக்டோபர் 11ஆம் தேதி (11.10.2025) மதுரையில் இருந்து தொடங்குகிறார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். இந்தத் தேர்தல் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கி வைக்க அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியைச் சேலத்தில் சந்தித்து நயினார் நாகேந்திரன் நேற்று (21.09.2025) அழைப்பு விடுத்தார். இதற்கு எடப்பாடி பழனிசாமியும் சம்மதம் தெரிவித்திருந்தார். 

Advertisment

இந்நிலையில் நயினார் நாகேந்திரன் இன்று (22.09.2025) டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் போது ஜெ.பி. நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அடுத்த மாதம் தொடங்க உள்ள தனது தேர்தல் சுற்றுப்பயணம் தொடர்பாக மத்திய உள்துறை அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய டிடிவி தினகரனை பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் இன்று மாலை சந்தித்துப் பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.