விவசாயிகளின் பல மாத உழைப்பை உதாசீனப்படுத்தியுள்ள திமுக அரசின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது என தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர்  எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ‘நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்!’ எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக குறுவை நெல் சாகுபடியில் அறுவடை செய்த சுமார் 8,000 மெட்ரிக் டன்னுக்கு அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மன வேதனையளிக்கிறது.

Advertisment

அறுவடை செய்து 10 நாட்கள் கழிந்தும் நெல்மூட்டைகளைக் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் பல மாத உழைப்பை உதாசீனப்படுத்தியுள்ள திமுக அரசின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது. விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் திமுக அரசு நெல் கொள்முதலைத் துரிதப்படுத்த வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனாலும், அலட்சியப்போக்குடன் செயல்பட்டு, நெல்மூட்டைகளை சேதப்படுத்தியது மட்டுமன்றி அறுவடைக்குத் தயாராக இருந்த 1,00,000-ற்கும் அதிகமான ஏக்கர் நெற்பயிர்களையும் தண்ணீரில் மிதக்கவிட்டு விவசாயப் பெருமக்களைக் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது திமுக அரசு. 

Advertisment

எனவே, ‘நானும் டெல்டாக்காரன் தான்’ என விளம்பர வசனம் பேசும் முதல்வர் மு.க. ஸ்டாலின், அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாகக் கொள்முதல் செய்திடவும், பாதிப்புக்குள்ளான நெற்பயிர்களுக்கு ஏக்கர் ₹50,000 வீதம் நிவாரணம் வழங்கிடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.