தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமையில் அவரது ஆதரவாளர்களோடு கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதி (31.07.2025) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தனது உறவை முறித்துக் கொண்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெறாது. எந்த கட்சியுடனும் கூட்டணி என்பது இன்றைய நிலையில் இல்லை. எதிர்காலத்தில் நிலைமைகளுக்கேற்ப கூட்டணியை முடிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது என முடிவெடுக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து, மதுரையில் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நேற்று முன்தினம்  (01.08.2025) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.  அப்போது அவர், “என்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன். ஓபிஎஸ் விரும்பினால் ஆகஸ்ட் 26ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஓ. பன்னீர்செல்வம் நேற்று (02.08.2025) வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘நயினார் நாகேந்திரன், தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இதில் எள்ளளவும் உண்மை இல்லை. எனவே, இது குறித்த உண்மை நிலையை தெரிவிப்பது என் கடமை. நயினார் நாகேந்திரனை, ஆறு முறை கைபேசியில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன். ஆனால், அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை. எனவே, நயினார் நாகேந்திரனிடம் பேச வெண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதற்கும் அவர், எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை’ எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நயினார் நாகேந்திரன் இன்று (03.02.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “கடிதம் அனுப்பிஇருக்கேன் என்று சொன்னது எனக்குத் தெரியவில்லை. அந்த கடிதம் எனக்கு இன்னும் வந்து சேரவில்லை. அந்த கடிதம் வந்துசேர்ந்தால் கண்டிப்பாக நான் எடுத்துக் காட்டுகிறேன். அப்போது யார் உண்மை சொல்லி இருக்கிறார்கள். யார் பொய்ச் சொல்லிருக்கிறார்கள் என்று தெரியும்.

இது எதையோ ஒரு குற்றச்சாட்டாக ஏற்கனவே அவருக்குள் ஏதாவது தொடர்பு இருந்திருந்தால் தான் இந்த மாதிரி ஒரு முடிவு எடுத்திருக்க முடியும் என்பது எல்லோருடைய கருத்தாக இருக்கிறது. அவர்களைப் பற்றிக் குறை சொல்வதற்கு நான் இல்லை. அவர்கள் முடிவு எடுத்ததற்கு ஒரு காரணத்தைச் சொல்லுகிறார்கள் அவ்வளவுதான். அவர் என்னைத் தொடர்பு கொண்டதாக அவர் சொல்கிறதுதான் ஆதாரமாக இருக்குமே தவிர. ஆதாரம் அவருடைய கையில் இருக்காது. நான் தான் அவரை தொடர்பு கொண்டேன். அதாவது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவர் சந்திக்கச் செல்வதற்கு முதல்நாள் நான் அவருடைய தொலைப்பேசிக்குத் தொடர்பு கொண்டேன்.

Advertisment

இதற்கு முன்னால், சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது பல நேரங்களில் அவர் என்னை அழைத்திருக்கிறார். அவர் என்னுடைய உதவியாளர்களைக் கூட அழைத்திருக்கிறார் எனச் சொல்கிறார். ஆனால் என்னுடைய உதவியாளர்கள் யாருமே அவர் அழைத்ததாக எனக்குத் தகவல் தரவில்லை. ஆக இதையே ஒரு குறையாக அவர் சொல்லி இருக்கிறார். நான் அவரை பற்றிக் குறை சொல்ல மாட்டேன்” எனப் பேசினார்.