ஆளுநர் மீது இனியும் வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் தமிழக பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என எச்சரிக்கிறேன் என தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைத், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தரக்குறைவாக விமர்சித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. தான் வகிக்கும் பதவிக்குரிய பொறுப்பின் மீது துளியும் அக்கறையில்லாத துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு, ஐ.பி.எஸ்., அதிகாரியாக சிறப்பாகப் பணியாற்றி, அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியை அடிப்படையின்றி விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது?
திமுக மீது தமிழக மக்கள் கொண்டுள்ள கோபத்தைத் திசைதிருப்ப இந்தி திணிப்பு, மதவாதம் என்று வாய்க்கு வந்ததைக் கூறும் முன், தேசிய கல்விக் கொள்கையில் 'இந்தி கட்டாயம்' என்று எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது எனத் திமுகவால் காட்ட முடியுமா?. இந்து மதத்தை இழிவுபடுத்தவில்லை என சத்தியம் செய்ய முடியுமா?. ஆளுநரால் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முதலில் இந்திய அரசியலமைப்பின் மாண்பைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பு சாசனப்படி நியமிக்கப்பட்ட ஆளுநர் மீது இனியும் வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் தமிழக பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என எச்சரிக்கிறேன்.
மேலும், திமுகவின் நிர்வாக சீர்கேடால் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு, ஊழல், முறைகேடு, பெருகும் போதைப் புழக்கம் ஆகியவற்றை எதிர்த்துதான் தமிழகம் போராட வேண்டும், போராடிக் கொண்டும் இருக்கிறது. கூடிய விரைவில் அந்தப் போராட்டத்தில் தமிழகம் வெல்லும். புதிய ஆட்சி அமையும். எனவே, எஞ்சியிருக்கும் 7 மாதங்களில் ஆளுநரை அடிப்படையின்றி விமர்சிக்காமல், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் வள்ளலாரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “மாநிலம் முழுவதும் பயணிக்கும் போது ‘தமிழ்நாடு போராடும்’ என்று சுவர்களில் எழுதியுள்ளார்கள். தமிழ்நாடு யாருடன் போராடும்?. தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை. இங்கு எந்த சண்டையும் இல்லை. எனவே தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும்” எனப் பேசியிருந்தார். அதே சமயம் திமுகவின் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகத்தை குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.