தமிழக இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்புகள் இன்று பறிபோயுள்ளன என தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ‘முதலீடுகளைக் கோட்டை விடும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே!’ எனக் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் ₹1720 கோடி முதலீடு செய்யவிருந்த தென்கொரிய நிறுவனம் ஹ்வாசங், தற்போது தமிழகத்தை விட்டு ஆந்திராவில் முதலீடு செய்யவிருப்பதாய் அறிவித்த சேதி அறிவீர்களா?. ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்’ என்று வீண் பேச்சு பேசும் முதல்வர் அவர்களே, உங்கள் அரசாங்கத்தின் விளைவாகத் தான் தமிழக இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய 20 ஆயிரம் நேரடி வேலைவாய்ப்புகள் இன்று பறிபோயுள்ளன.
‘புலி வருது, புலி வருது’ என்பது போல ஒவ்வொரு முறையும் தாங்கள் முதலீடு வருகிறது என்று விளம்பரம் வெளியிடுவதும், பின் அந்த முதலீடு அண்டை மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாய் செய்தி வருவதும் தொடர் கதையாகி வருகிறது. முதலீட்டை ஈர்க்கிறேன் என வெளிநாடுகளுக்குப் பயணம் சென்றுவிட்டு வெறுங்கையுடன் திரும்புவது, தானாகக் கிடைத்த முதலீட்டையும் எந்தவொரு முயற்சியும் எடுக்காது கோட்டை விடுவது, தமிழகத்தின் எதிர்காலத்தைச் சிதைப்பது என மும்முரமாக இருக்கும் நீங்கள், மீண்டுமொரு முறை ஆட்சிக் கோட்டையைப் பிடித்து தமிழகத்தைத் தலை நிமிரச் செய்வேன் என்று கூறுவதை நினைத்தல் சிரிப்புத் தான் வருகிறது முதல்வரே” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us