Nainar Nagendran formed a committee to include more parties in NDA
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, விருப்ப மனு என தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதன்படி, அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பா.ம.க, தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த மாதம் 23ஆம் தேதி செங்கல்பட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடக்க விழாவில் மேற்கூறிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என சூளுரைத்தனர். இதனிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய இருப்பதாக கூட்டணி தலைவர்கள் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலையொட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பதற்காக தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குழு ஒன்றை அமைத்துள்ளார். இது குறித்து நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளதாவது, “வருகின்ற சட்டமன்ற தேர்தல் 2026 சிறப்பாக எதிர்கொண்டு, மகத்தான வெற்றியினை பெற்றிடும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல அமைப்புகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அமைப்பு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலுசேர்த்திட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில குழு அமைக்கப்படுகிறது. அந்த குழுவின் தலைவராக வி.பி. துரைசாமி, மாநிலத் துணை தலைவராக மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பாலச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அதே போல், விஜய்யின் தவெகவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தவிர தேமுதிக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, ராமதாஸ் தரப்பு பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us