Nainar Nagendran criticized Vijay
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
குறிப்பாக அவர் பேசியதாவது, “அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில் அடுத்தவர்களுடைய அட்ரஸில் அரசியல்வாதிகளாக இருந்துகொண்டு இவர்கள் எல்லோருக்கு ஒரு சவால் விடுகிறேன். என்னை மாதிரி தனியாக சொந்தமாக ஒரு கட்சி ஆரம்பித்து குறைந்தபட்சம் ஒரு சதவீதம் வாக்கு வாங்கி காட்டுகிற அந்த தில்லு இருக்கிறதா? திராணி இருக்கிறதா? இந்த கூட்டணி கட்சிகளை மட்டுமே நம்பி இருக்கிற 75 வருட கட்சி, 50 வருட கட்சி என்று ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டிருக்கிற எல்லோரையும் மீறி இன்றைக்கு களத்தில் தனியாக நின்று இந்த இரண்டே வருடத்தில் முதன்மை சக்தியாக வளர்ந்து 30 சதவீதத்தையும் தாண்டி மக்கள் ஆதரவை பெற்றிருக்கிறோம்.
உங்களுக்கு அனுபவம் என்னவென்று நான் சொல்லட்டுமா? கட்சி ஆரம்பித்த அண்ணாவை மறந்தது, கட்சி ஆரம்பித்த எம்.ஜி ஆரை மறந்தது, கட்சியை வளர்த்த ஜெயலலிதாவை மறந்தது தான். இவர்கள் எல்லோரும் சொன்ன விஷயங்கள், பேசின விஷயங்கள், எதை எதை எல்லாம் ஃபாலோ செய்ய வேண்டும் என்று சொன்ன விஷயங்கள் என எல்லாவற்றையும் மறந்தது தான். நமக்கு அனுபவம் இல்லை என்று சொல்கிறார்கள். நமக்கு அனுபவம் இல்லை தான், கொள்ளை அடிப்பதில் அனுபவம் இல்லை. அதெல்லாம் சுட்டு போட்டாலும் வராது. இந்த கொள்கையை பேருக்கு மட்டும் வைத்துக்கொண்டு நேரடியாக சரண்டர் ஆவது, மறைமுகமாக சரண்டர் ஆவது, இந்த மாதிரி அனுபவம் எல்லாம் நமக்கு இல்லை தான். அதுவும் நமக்கு சுட்டு போட்டாலும் வராது” என்று பேசினார்.
இந்த நிலையில் விஜய்யை பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “பாவம் அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் அவர் வீட்டில் இருந்து வெளியே வரணும். திரிஷாகிட்ட இருந்து முதலில் வெளியே வந்தால் தான் எல்லாமே நடக்க முடியும். அதாவது அவர் குடும்பத்தோடு நல்ல உறவு வைக்க வேண்டும். நல்ல தலைவர் வழிநடத்துன இயக்கத்தை நல்ல முறையில் சொல்லணும். முதலில் வீட்டில் இருந்து வெளியே வந்தால் தானே தெரியும்.
களத்தில் ஒரு கவுன்சிலர் கூட இல்லாதவர் அவர். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா?. ஒரு காலும் முடியாது. இதுதான் விஜய்க்கு பதில். முதலில் குடும்பஸ்தனாக ஒரு கட்சி நடத்த வேண்டும். அவர் எனக்கு ஆளே கிடையாது. கூட்டம் இருந்தால் என்ன, ஓட்டு வேண்டாமா? விஜயகாந்துக்கு கூடாத கூட்டமா? ஓட்டு வேண்டாமா? நானும் ஆஞ்சனேயர் மாதிரி மலையை தாண்டுவேன் என்று சொல்லலாம். நம்பிக்கை தான், ஆனால் அது முடியுமா? ஒரு கூட ஜெயிக்க முடியாது” என்று கூறினார்.
Follow Us