நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

boat

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் என்ற பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் முத்துவேல் மற்றும் ரகுமான் என்பவர்களுக்குச் சொந்தமான 3 நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். அதன்படி மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர் செல்வராஜைக் கத்தியால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதன் பின்னர் மீனவர்களிடம் இருந்த 1000 கிலோ மீன்பிடி வலைகள் உள்ளிட்ட மீன் பிடி உபகரணங்களையும் கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கடலோர காவல் குழும காவல்துறையினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடியிடம், முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பாக வழங்கப்பட்டிருந்த கோரிக்கை மனுவில், “இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவது ஏழை மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மோசமாகப் பாதித்துள்ளது.இந்த சிக்கலான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காணப் பிரதமர் மோடி நேரடி கவனத்தைச் செலுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி உபகரணங்களுடன் கூடிய படகுகளையும் விடுவிக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Boat fisherman Nagapattinam Sri Lanka Vedaranyam
இதையும் படியுங்கள்
Subscribe