திருவண்ணாமலை மாவட்டம் தவெகவின் கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் உதயகுமார். செய்யார், வந்தவாசி (தனி தொகுதி) ஆகிய தொகுதிகள் இவரது நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இவருக்கு கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு வந்தவாசி, செய்யார் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிளில் தவெக நிர்வாகிகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டுள்ளார்.

Advertisment

அந்த வகையில் வந்தவாசி நகரத்தில் திருமண மண்டபம் ஒன்றில் பிறந்தநாள் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக வந்தவாசி ஐந்துகண் பாலம் என்கிற இடத்தில் இருந்து, 1 கி.மீ தொலைவிலுள்ள புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள திருமண மண்டபத்திற்கு ஊர்வலமாக செல்ல வந்தவாசி காவல்நிலையத்தில் விஜய் ரசிகர்கள் அனுமதி கேட்டுள்ளனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. நீங்க யாரு எங்களுக்கு தடைப்போட, நாங்க போவோம் என 150 பேர் இருசக்கர வாகனத்திலும், வேனிலும் ஊர்வலம் சென்றுள்ளனர்.

Advertisment

திறந்த ஜீப்பில் கழுத்தில் பூ மாலை போட்டுக்கொண்டு கையில் வீச்சருவா வைத்துக்கொண்டு வந்தவாசியின் முக்கிய வீதியில் ஊர்வலம் சென்றதால் சுமார் 1 மணி நேரம் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பட்டாசு வெடித்ததோடு ஊர்வலத்தில் இவர்கள் ஊதிய விசில் சத்தம் மக்களை கடுப்பாக்கியது. இவர்களின் அட்டகாச வீடியோக்களை அவர்களே சமூகவலைத்தளத்தில் வெளியிட்டனர். இந்த அலப்பறைகள் மீடியா செய்தியானது. காவல்துறை உயரதிகாரிகள் இதுப்பற்றி கேள்வி எழுப்பியதும் வந்தவாசி காவல்நிலையத்தில் தவெக மாவட்டச் செயலாளர் உட்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்து பூமாலை போட்ட கிரேன் பறிமுதல் செய்தனர். தங்களையும் கைது செய்துவிடுவார்களோ என ஊர்வலத்தில் வந்த ரசிகர்கள் பயந்துப்போய் உள்ளனர்.

இதுக்குறித்து வந்தவாசி நகர தவெக நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, ‘செய்யார் அனக்காவூரைச் சேர்ந்தவர் உதயகுமார். ஆட்டோ டிரைவரான அவர், எங்க தளபதி விஜய்யின் தீவிர ரசிகர். அவர் கிழக்கு மாவட்டச் செயலாளரானதும் அணி நிர்வாகிகளை போடுகிறேன், நகர, ஒன்றிய செயலாளர்களை போடுகிறேன் என 2 லட்சம், 3 லட்சம் என பணம் வாங்கினார். அந்த பணத்தை வைத்து கார் வாங்கி வைத்துக் கொண்டுள்ளார். தளபதி விஜய்யின் பிறந்தநாளைக்கூட அவர் இப்படி கொண்டாடவில்லை. அவரது பிறந்தநாளுக்கு இவ்ளோ அலப்பாறை. அவர் வரும் தேர்தலில் வந்தவாசி தொகுதியில் போட்டியிட விருப்பமனு தந்துள்ளார். ஆனால் இப்போதே எம்.எல்.ஏவானதுப் போல் கேக் கில் உதயகுமார் எம்.எல்.ஏ பெயர் போட்டு கேக் வெட்டினார். அவரது ஊர்வலம், அலப்பறை பிரச்சனையானதும் என்ன செய்வது எனத்தெரியாமல் முழிக்கிறார்’ என்றார்.

Advertisment

இவ்விவகாரம் பெரியதானதால் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், பொதுமக்களுக்கு தொந்தரவு தந்து, இதுப்போன்ற நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.