திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பள்ளி மாணவனின் கழுத்தை மர்ம நபர்கள் கத்தியால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருணாச்சலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன்-வசந்தி தம்பதி. இவர்களுடைய மகன் வத்தலக்குண்டு பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் வழக்கம்போல பள்ளிக்கு சிறுவன் நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கத்தியால் சிறுவனின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பினர்.

இதில் ரத்த காயத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்துள்ளான். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். உடனடியாக மீட்கப்பட்ட சிறுவனை அக்கம்பக்கத்தினர் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. பட்டப்பகலில் ஆறாம் வகுப்பு பயின்று வைத்த பள்ளி மாணவன் மர்ம நபர்களால் கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.