தமிழக அரசு மகளிருக்கு உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கி வருகிறது. இந்த மாதத்தில் 5,000 ரூபாயாக மகளிருக்கு வங்கிக்கணக்கில் நேற்று வரவு வைக்கப்பட்டது. அதாவது, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், கோடைக்கால சிறப்புத் தொகுப்பும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்த அறிவிப்புக்குப் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக, திமுக மகளிர் அணியினர் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அரசு வங்கிக்கணக்கில் வரவுவைக்கப்பட்ட பணத்தை, கையில் காண்பித்தபடியே பெண்கள் அறிவாலயத்தில் குழுமினர். அதுபோக, திமுகவினர் இந்த அறிவிப்பைக் கொண்டாடும் விதமாகப் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். அதேநேரம் தேர்தலையொட்டி திமுக அரசு இப்படி செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் நேற்று  மதுரை திருமங்கலம் அடுத்த டி.கல்லுப்பட்டியில் 125 நாள் உறுதி திட்டத்தை திமுக அரசு சீர்குலைக்க முயல்வதாக கண்டித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஆர்.பி.உதயகுமார், ''இந்த மாசத்துக்கு 1000, அடுத்த மாசத்துக்கு 1000, அதுக்கு அடுத்த மாசத்துக்கு 1000, தேர்தல் நேரத்தில் முடக்க பாக்குறாங்க. அதனால் கோடைக்காலத்துக்கு 2000 என மொத்தம் 5000 ரூபாய். ஏன்பா ஸ்டாலின் அஞ்சு வருஷம் முதலமைச்சராக இருந்திங்களே அப்போது கொடுக்கலையே என் ராசா. எங்க எடப்பாடி பழனிசாமி ஆர்பாட்டத்தை அறிவித்துவிட்டார். அதனால் ஆடிப்போய் காலையில் ஐந்து மணிக்கு அறிவித்துள்ளீர்களே. எப்பா ஸ்டாலின் நடிப்பில் சிவாஜி தோத்துட்டாருப்பா தோத்துட்டாரு'' என்றார்.