கலைஞரின் மூத்த மகனும், நடிகருமான மு.க.முத்து (77) உடல் நலக்குறைவு காரணமாக காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடலானது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி அளவில் மு.க.முத்துவின் உயிர் பிரிந்ததாக அவருடைய மனைவி தெரிவித்துள்ளார்.

கலைஞர் -பத்மாவதி தாயாரின் மூத்த மகன் மு.க.முத்து 1948 ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பிறந்தார். அணையா விளக்கு, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி பல்வேறு திரைப்படங்களில் மு.க.முத்து பாடல்களையும் பாடியுள்ளார். தேவா இசையமைத்த மாட்டுத்தாவணி படத்தில் நாட்டுப்புறப் பாடலையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மு.க.முத்து மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மு.க.முத்துவின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மதுரையிலிருந்து மு.க.அழகிரி அஞ்சலி செலுத்த வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், 'முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது.

Advertisment

தந்தை முத்துவேலர் நினைவாக அண்ணனுக்கு மு.க.முத்து என்று பெயர் சூட்டினார் தலைவர் கலைஞர் அவர்கள். தலைவர் கலைஞரைப் போலவே இளமைக் காலம் முதல் நாடகங்களின் மூலமாகத் திராவிட இயக்கத்துக்கு தொண்டாற்றத் தொடங்கியவர் அண்ணன் முத்து அவர்கள். 

நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தனக்கெனத் தனிப்பாணியை வைத்திருந்தார். அத்தகைய ஆற்றல், ஆர்வம் காரணமாக திரைத்துறையில் 1970-ஆம் ஆண்டில் நுழைந்தார். அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்தார்.

பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு ஆகிய படங்களின் மூலமாகத் தமிழ்நாட்டு ரசிகர் மனதில் நிரந்தரமாகக் குடியேறினார் அண்ணன் மு.க.முத்து அவர்கள்.

Advertisment

பல நடிகர்களுக்கு வாய்க்காத சிறப்பு அவருக்கு இருந்தது. தனது சொந்தக் குரலில் பாடல்களை இனிமையாகப் பாடும் திறனைப் பெற்றிருந்தார். 'நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்ற பாடலும், 'சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க'  என்ற பாடலும் பலராலும் இன்றும் மறக்க முடியாத பாடல் ஆகும்.

என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அவர். எப்போது அவரைப் பார்க்கச் சென்றாலும், பாசத்துடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். வயது மூப்பின் காரணமாக அவர் மறைவுற்றாலும் அன்பால் எங்கள் மனதிலும், கலையாலும் பாடல்களாலும் மக்கள் மனதிலும் என்றும் வாழ்வார் அண்ணன் மு.க.முத்து அவர்கள். என் ஆருயிர் அண்ணனுக்கு அன்பு உணர்வுடன் எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன்.